Italian Trulli

மனதைப் புரிந்து கொள்

  



மனதைப் புரிந்து கொள்  - ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் ஒருவன்.


“ என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர்.


“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான்.


“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்” என்றார் பெரிவர்.


“அப்படியா சொல்கிறீர்கள்?“


“ஆமாம்!”


“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?”


“மனதைப் புரிந்து கொள்... அது போதும்.”


“எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன்.


"இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் -


“ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.


மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது,


இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை; வருந்தமும் இல்லை.


எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.


தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை... துன்பமுமில்லை...” - அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான்.


துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.


“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”

விதியை நம்பக்கூடியவர்களே நிம்மதியாக வாழ்கிறார்கள் !

போதும் என்ற மனம் உள்ளவர்களே சந்தோஷமாக வாழ்கிறார்கள் !


Comments